2012-ல் இந்திய அணி கேப்டனாக யு-19 உலகக் கோப்பையை வென்ற உன்முக்த் சந்த், இந்திய கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
2012 யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி கேப்டனாக இருந்த உன்முக்த் சந்த், இறுதிச்சுற்றில் சதமடித்து அசத்தினார். இந்திய அணி சாம்பியன் ஆனதால் உன்முக்த் சந்த், விரைவில் இந்திய அணிக்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்திய ஏ அணிகளில் இடம்பெற்ற உன்முக்த் சந்த், அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார்.
சரியாக விளையாடாததால் 2017-ல் தில்லி அணியிலிருந்து நீக்கப்பட்டார். பிறகு உத்தரகண்ட் அணியில் இணைந்து விளையாடினார். எனினும் அவரால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் எடுத்து கவனம் ஈர்க்க முடியவில்லை. 18 வயதில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார். தில்லி, மும்பை, ராஜஸ்தான் அணிகளில் இடம்பெற்றார். முதல் தர கிரிக்கெட்டில் 3379 ரன்கள் எடுத்த உன்முக்த் சந்த், 28 வயதில் இந்திய கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இதையடுத்து பிசிசிஐக்கு விடை கொடுத்து உலகம் முழுவதிலும் உள்ள வாய்ப்புகளைத் தேடிச் செல்கிறேன் என இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அடுத்ததாக, அமெரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் உன்முக்த் சந்த் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.