இந்திய அணியின் கதவை இரு தமிழக வீரர்கள் பலமாகத் தட்டுகிறார்கள்: தினேஷ் கார்த்திக் பெருமிதம்

இறுதிச்சுற்று இரு தமிழக வீரர்களுக்கு உரித்தானது. பந்தில் சாய் கிஷோர், பேட்டிங்கில் ஷாருக் கான்.
இந்திய அணியின் கதவை இரு தமிழக வீரர்கள் பலமாகத் தட்டுகிறார்கள்: தினேஷ் கார்த்திக் பெருமிதம்

இந்திய அணியின் கதவைத் தமிழக வீரர்களான ஷாருக் கானும் சாய் கிஷோரும் பலமாகத் தட்டுகிறார்கள் என பிரபல வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

தில்லியில் நேற்று நடைபெற்ற  சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கர்நாடக அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. நடுவரிசை வீரர் அபினவ் மனோஹர் 46 ரன்களும் பிரவீண் டுபே 33 ரன்களும் எடுத்தார்கள். சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருடைய பந்துகளில் கர்நாடக பேட்டர்களால் ஒரு பவுண்டரியோ சிக்ஸரோ அடிக்க முடியவில்லை. தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து சையத் முஷ்டாக் அலி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்த ஷாருக் கான் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

கடைசி 4 ஓவர்களில் தமிழக அணி வெற்றி பெற 55 ரன்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் ஷாருக் கான் களமிறங்கியிருந்தார். அதனால் அணியைக் கரை சேர்க்க வேண்டிய மொத்தப் பொறுப்பும் அவரிடம் இருந்தது. தர்ஷன் வீசிய 17-வது ஓவரில் ஷாருக் கானும் சஞ்சய் யாதவும் 19 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் 18-வது ஓவரை வீசிய பிரதீக் ஜெயின் சஞ்சய் யாதவின் விக்கெட்டை வீழ்த்தியதோடு அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதனால் கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரின் முதல் 5 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கடைசி 7 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டன. கடைசிப் பந்தில் ஷாருக் கான் சிக்ஸர் அடித்ததால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்தில் சாய் கிஷோர் ஒரு பவுண்டரி அடித்தார். ஜெயின் இரு வைட் பந்துகளை வீசினார். இதனால் கடைசிப் பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. பரபரப்பான அந்தத் தருணத்தில் அற்புதமான சிக்ஸர் அடித்து தமிழக அணிக்கு வெற்றியை வழங்கினார் அதிரடி வீரர் ஷாருக் கான்.

தமிழக அணி கடந்த வருடம் சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றபோது கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக், இந்த வெற்றி குறித்து கூறியதாவது:

இறுதிச்சுற்று இரு தமிழக வீரர்களுக்கு உரித்தானது. பந்தில் சாய் கிஷோர், பேட்டிங்கில் ஷாருக் கான். தமிழக அணி கடைசியில் ஜெயிக்கும்போது இரு வீரர்களுக்கும் ஆடுகளத்தில் இருந்தது பொருத்தமானது. இந்திய அணியின் கதவை இருவரும் பலமாகத் தட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com