ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட பயிற்சி ஆட்டத்தில் ஏபி டி வில்லியர்ஸ் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
14-வது ஐபிஎல் சீசனின் மீதமுள்ள ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்குகின்றன. இதற்குத் தயாராகும் வகையில் ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் முகாமிட்டு பயிற்சிகளைத் தொடங்கியுள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பயிற்சியின் ஒரு பகுதியாக ஹர்ஷல் படேல் தலைமையிலும், தேவ்தத் படிக்கல் தலைமையிலும் இரண்டு அணிகளாகப் பிரித்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.
இதையும் படிக்க | களமிறங்கியது கடைக்குட்டி சிங்கம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் சாம் கரன்
டாஸ் வென்ற ஹர்ஷல் படேல் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணிக்கு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய டி வில்லியர்ஸ் 46 பந்துகளில் 7 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் உள்பட 104 ரன்கள் விளாசினார். அவருக்கு ஒத்துழைப்பு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது அசாருதீன் 43 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 66 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹர்ஷல் படேல் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.
213 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் தேவ்தத் படிக்கல் அணி களமிறங்கியது. அந்த அணியும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ஸ்ரீகர் பாரத் 47 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 95 ரன்கள் விளாசினார். படிக்கல் 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.