விக்கெட் கீப்பர் சஹாவை மிரட்டியவர் குறித்து விசாரணை நடத்தப்படும் என பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார்.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலியின் விலகலையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மூத்த வீரர்களான ரஹானேவும் புஜாராவும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். சஹா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை.
இந்திய அணியில் தன்னைச் சேர்த்துக்கொள்ளாதது பற்றி அதிருப்தி தெரிவித்துள்ள சஹா, பிரபல பத்திரிகையாளர் ஒருவருக்குத் தான் பேட்டியளிக்க மறுத்ததால் தன்னை அவர் குறுந்தகவல் வழியாக மிரட்டியதாகவும் பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அந்தப் பத்திரிகையாளர் அனுப்பிய வாட்சப் தகவலையும் ட்விட்டரில் நேற்று பகிர்ந்தார். இதையடுத்து அந்தப் பத்திரிகையாளரின் பெயரை சஹா வெளியிடவேண்டும் என்று பல கிரிக்கெட் வீரர்களும் சஹாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதுபற்றி பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியதாவது:
சஹாவிடம் அவருடைய ட்வீட் பற்றியும் என்ன நடந்தது என்பது பற்றியும் கேள்வி கேட்போம். அவர் மிரட்டப்பட்டாரா, அந்த ட்வீட்டின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை செய்வோம். இப்போது அதிகமாகக் கூறமுடியாது. செயலாளர் (ஜெய் ஷா) சஹாவிடம் நிச்சயம் பேசுவார் என்றார்.