அதிக சிக்ஸர்கள்: ரோஹித் சர்மா நிகழ்த்திய புதிய சாதனை
ஒருநாள் கிரிக்கெட்டில் 250 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் ரோஹித் சர்மா.
இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 5-வது டெஸ்டில் தோற்ற இந்திய அணி, டி20 தொடரை 2-1 என வென்றது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது இந்திய அணி. இங்கிலாந்து அணி பும்ராவின் அற்புதமான பந்துவீச்சில் வீழ்ந்தது. அந்த அணி, 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஜாஸ் பட்லர் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். 7.2 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்தார் பும்ரா. ஷமி 3 விக்கெட்டுகளையும் பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். இந்திய அணி 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் ஆட்டத்தை வென்றது. ரோஹித் சர்மா 76, ஷிகர் தவன் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
2-வது ஒருநாள் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.
முதல் ஒருநாள் ஆட்டத்தில் 76 ரன்கள் எடுத்த 35 வயது ரோஹித் சர்மா, 5 சிக்ஸர்களை அடித்தார். இதன்மூலம் 250 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளார்.
ஒருநாள்: அதிக சிக்ஸர்கள்
அஃப்ரிடி - 351
கெய்ல் - 331
ஜெயசூர்யா - 270
ரோஹித் சர்மா - 250
தோனி - 229