மும்பை வீரர் ஜெயிஸ்வால், உத்தரப் பிரதேச அணிக்கு எதிராக மீண்டும் சதமடித்து அசத்தியுள்ளார்.
பெங்களூரில் மும்பை - உத்தரப் பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 140.4 ஓவர்களில் 393 ரன்கள் எடுத்தது. யாஷஸ்வி ஜெயிஸ்வால் 100 ரன்களும் ஹார்திக் தாமோர் 115 ரன்களும் எடுத்தார்கள். சர்பராஸ் கான் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கரண் சர்மா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உத்தரப் பிரதேச அணி முதல் இன்னிங்ஸில், 54.3 ஓவர்களில் 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சாளர் ஷிவம் மவி மட்டும் நன்கு விளையாடி 48 ரன்கள் எடுத்தார்.
முதல் இன்னிங்ஸில் 213 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி, 2-வது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. 4-ம் நாளான இன்று 85 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்துள்ளது. ஜெயிஸ்வால் மீண்டும் சதமடித்து அசத்தியுள்ளார். அவர் 106 ரன்களுடனும் அர்மான் ஜாஃபர் 86 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள். மும்பை அணி, 483 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.
காலிறுதியில் சதமடித்த ஜெயிஸ்வால், அரையிறுதியில் இரு சதங்கள் அடித்துள்ளார்.
20 வயதில் மிகச்சிறப்பாகவும் பொறுப்பாகவும் விளையாடுவதால் இந்திய ஏ அணிக்கு ஜெயிஸ்வாலை விரைவில் தேர்வு செய்யவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். எனினும் தற்போதுதான் 3-வது முதல்தர ஆட்டத்தில் விளையாடுவதால் இன்னொரு ரஞ்சி கோப்பைப் போட்டியிலும் நன்கு விளையாடிய பிறகே ஜெயிஸ்வாலை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஐபிஎல் போட்டியில் விளையாடி கவனம் பெற்ற ஜெயிஸ்வால் இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் முக்கியமான ஆட்டங்களில் சதங்கள் அடித்து முத்திரை பதித்து வருகிறார். இதேபோல சிறப்பாக விளையாடி விரைவில் இந்திய அணியிலும் திறமையை நிரூபிக்கட்டும்.