இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா(58) தேர்வாகவுள்ளார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் தில்லியில் வருகிற டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், தலைவர் தேர்தலுக்கு பி.டி.உஷா மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், போட்டியின்றி தலைவராக தேர்வாகவுள்ளார். இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெறவுள்ளார்.
இதற்கிடையே, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தங்கப் பெண் பி.டி.உஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் பி.டி.உஷா நியமிக்கப்பட்டார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை குவித்துள்ள பி.டி. உஷா, கடந்த 1984-ல் நடந்த ஒலிம்பிக்கில் 400 மீட்டர் போட்டியில் 4-வது இடம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.