ஹாங் காங் அணி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.
ஆசியக் கோப்பையில் இன்று (செப்டம்பர் 2) நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் மோதுகின்றன. இந்தப் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங் காங் அணியின் கேப்டன் நிஷாகத் கான் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் களமிறங்கினர். கேப்டன் பாபர் அசாம் 9 ரன்களில் வெளியேற அடுத்து ஃபகர் ஜமான் களம் கண்டார்.
முகமது ரிஸ்வான், ஃபகர் ஜமான் ஜோடி ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. முகமது ரிஸ்வான், ஃபகர் ஜமான் என இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். அணியின் ஸ்கோர் 129ஆக இருந்தபோது ஃபகர் ஜமான் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் களமிறங்கிய குஷ்தில் ஷாவும் தன்பங்கிற்கு அதிரடியில் மிரட்டினார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. முகமது ரிஸ்வான் 78 ரன்களுடனும், குஷ்தில் ஷா 35 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர்.