காமன்வெல்த் மகளிர் ஹாக்கி அரையிறுதியில் சர்ச்சை: இந்திய அணி ஏமாற்றம்

இந்திய அணிக்கு எதிரான காமன்வெல்த் மகளிர் ஹாக்கி அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று...
இந்திய மகளிர் ஹாக்கி அணி
இந்திய மகளிர் ஹாக்கி அணி

இந்திய அணிக்கு எதிரான காமன்வெல்த் மகளிர் ஹாக்கி அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்தது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் ஹாக்கி அணி, நூலிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டது. ஸ்பெயினில் நடைபெற்ற மகளிர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. அப்போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 9-ம் இடத்தைப் பிடித்தது. பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் கானா, வேல்ஸ், கனடா அணிகளை வீழ்த்திய இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதியது. 

2018 காமன்வெல்த் கேம்ஸில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 4-வது இடத்தைப் பிடித்தது. ஆனால் இதற்கு முன்பு இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2002-ல் மான்செஸ்டரில் நடைபெற்றபோது தங்கம் வென்றது. இதனால் இங்கிலாந்தில் இம்முறை நடைபெறும் போட்டியிலும் இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கம் வெல்லவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அதற்கேற்றாற்போல் இந்திய மகளிர் ஹாக்கி அணி பலம் வாய்ந்த ஆஸி. அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனில் இருந்தன. இதனால் ஷுட் அவுட் முறையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்கிற கோல் கணக்கில் இந்திய அணியைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 

ஷுட் அவுட்டின் ஆரம்பத்தில் ஆஸி. அணியின் முதல் வாய்ப்பை இந்திய அணியின் கோல் கீப்பர் சவிதா அபாரமாகத் தடுத்தார். அப்போது கடிகாரம் செயல்படாததால் (குறிப்பிட நேரத்துக்குள் கோல் முயற்சி நிகழ வேண்டும்) நடுவர் அதை ஏற்க மறுத்து ஆஸி. வீராங்கனைக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளித்தார். இதில் அவர் கோல் அடித்தார். இதை எதிர்பாராத இந்திய அணி மிகவும் ஏமாற்றமும் கோபமும் அடைந்தது. இந்திய அணியின் பயிற்சியாளர் கள நடுவரிடம் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை. இதனால் ஆட்டத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. நடுவரின் தவறான முடிவால் இந்திய ஹாக்கி வீராங்கனைகளால் சரியான மனநிலையுடன் ஆட முடியவில்லை. இதனால் தான் அரையிறுதியில் தோற்றார்கள் என நடுவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். கடைசிவரை போராடியும் வெற்றி கிடைக்காததால் இந்திய ஹாக்கி வீராங்கனைகள் மிகவும் வேதனையடைந்தார்கள். அடுத்ததாக, வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி நியூசிலாந்துடன் மோதவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com