பாகிஸ்தானுக்கு எதிராக கோலி அரை சதமெடுத்தால்... ரவி சாஸ்திரி

பெரிய வீரர்கள் தகுந்த நேரத்தில் மீண்டெழுவார்கள்.
பாகிஸ்தானுக்கு எதிராக கோலி அரை சதமெடுத்தால்... ரவி சாஸ்திரி

சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கோலி சதமடிக்கவில்லை. 2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற டெஸ்டில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. அது அவருடைய 70-வது சதம். 27-வது டெஸ்ட் சதம். அடுத்தச் சதம் எப்போது என்று நீண்ட நாளாகக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். சமீபத்தில் இங்கிலாந்தில் விளையாடிய ஆறு இன்னிங்ஸில் ( ஒரு டெஸ்ட், தலா 2 ஒருநாள், டி20) மொத்தமாக 76 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

இந்நிலையில் கோலி பற்றி இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:

இயல்பான மனநிலையுடன் உள்ள கோலி மீண்டு வருவார். ஏனெனில் பரபரப்பு அடங்கிவிட்டது. சில காலம் விளையாடாமல் ஓய்வு எடுத்துள்ளார். முதல் ஆட்டத்தில் (பாகிஸ்தானுக்கு எதிராக) கோலி அரை சதமெடுத்தால் மீதமுள்ள ஆசியக் கோப்பை போட்டி வரை அனைவருடைய வாயையும் அடைத்து விடுவார். கடந்த காலத்தில் நடந்தது முடிந்துவிட்டது. பெரிய வீரர்கள் தகுந்த நேரத்தில் மீண்டெழுவார்கள். பணிச்சுமையிலிருந்து விடுபட அவர்களுக்கு ஓய்வு தேவை. மோசமாக விளையாடும் தருணத்தை எதிர்கொள்ளாத கிரிக்கெட் வீரரே உலகில் இல்லை என்றார். 

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com