நீரஜ் சோப்ரா அடுத்து பங்கேற்கும் போட்டி அறிவிப்பு
By DIN | Published On : 24th August 2022 01:58 PM | Last Updated : 24th August 2022 01:58 PM | அ+அ அ- |

ஸ்விட்சர்லாந்தில் நடைபெறும் டையமண்ட் லீக் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா அறிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீ. தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் 88.13 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் நீரஜ் சோப்ரா. உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 2-வது இந்தியர் நீரஜ் சோப்ரா. 2003-ல் பாரிஸில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்றார். பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் நீரஜ் சோப்ரா காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் ஆகஸ்ட் 26 அன்று ஸ்விட்சர்லாந்தின் லுசானேவில் நடைபெறவுள்ள டையமண்ட் லீக் போட்டியில் பங்கேற்கவுள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் நீரஜ் சோப்ரா அறிவித்துள்ளார். இந்தப் போட்டியின் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், அடுத்ததாக ஜூரிச்சில் செப்டம்பர் 7-8 தேதிகளில் நடைபெறவுள்ள டையமண்ட் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் பங்கேற்பார்கள். நீரஜ் சோப்ரா தற்போது 4-ம் இடத்தில் உள்ளார். இதற்கு முன்பு ஸ்டாக்ஹோம் டையமண்ட் லீக் போட்டியில் 2-ம் இடம் பிடித்தார்.
இதுவரை எல்லா முக்கியப் போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளதால் டையமண்ட் லீக் போட்டியிலும் பதக்கம் வெல்ல வேண்டும் என நீரஜ் சோப்ரா சமீபத்தில் விருப்பம் தெரிவித்திருந்தார்.