இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் ஜோகன்னர்ஸ்பர்கில் திங்கள்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்திருந்தது.
இதையும் படிக்க | 2-வது டெஸ்டில் ஷர்துல் தாக்குர் அபாரப் பந்துவீச்சு: தெ.ஆ. 102/4
இதன்பிறகு, தெம்பா பவுமா மற்றும் கைல் வெரீன் பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். பவுமா துரிதமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். 5-வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில், வெரீன் 21 ரன்களுக்கு ஷர்துல் பந்தில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, அரைசதம் அடித்த பவுமாவும் ஷர்துல் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, மார்கோ ஜான்சென் மற்றும் கேசவ் மகாராஜ் சிறிய பாட்னர்ஷிப் அமைத்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறச் செய்தனர்.
ஷர்துல் தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசி மகாராஜ் மற்றும் லுங்கி என்கிடியை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்களுக்கு ஆட்டமிழந்து முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.