அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான கேத்ரின் கார்டன் பெல்லிஸ் என்கிற சிசி பெல்லிஸ், 22 வயதில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு டென்னிஸ் உலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
2014-ல் தரவரிசையில் 12-ம் இடத்தில் இருந்த வீராங்கனையை யு.எஸ். ஓபன் போட்டியில் தோற்கடித்து அப்போட்டியில் கடந்த 18 வருடங்களில் வெற்றி பெற்ற இளம் வீராங்கனை என்கிற சாதனையைப் படைத்தார். அப்போது அவருக்கு வயது 15. 2018-ல் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்த 2-வது இளம் வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றார் சிசி பெல்லிஸ். 2016-ல் ஹவாய் டென்னிஸ் ஓபன் பட்டத்தை வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அதிகபட்சமாக மூன்று முறை மூன்று சுற்றுகள் வரை முன்னேறியுள்ளார்.
இந்நிலையில் 22 வயதில் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சிசி பெல்லிஸ். இதுபற்றி அவர் கூறியதாவது:
நீண்ட காலமாக டென்னிஸில் நான் ஈடுபடவில்லை. கடந்த வருடம் கையில் ஏற்பட்ட காயம் குணமாகாமல் இருந்ததால் விளையாடுவதை நிறுத்தினேன். கடந்த மூன்று வருடங்களாகக் காயங்களால் மனத்தளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். இனிமேலும் இதைத் தொடர முடியாது.
எனக்கு டென்னிஸ் விளையாட்டு மிகவும் பிடிக்கும். ஆனால் அதிலிருந்து நகரவேண்டிய நேரமிது. நல்ல செய்தி என்னவென்றால் காயத்தினால் கிடைத்த ஓய்வினை நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறேன். இப்போது வணிகம் தொடர்பான பட்டப் படிப்பை முடிக்கவுள்ளேன். அடுத்ததாக எம்பிஏ படிக்கப் போகிறேன். முதலீட்டு ஆலோசகராகவும் முழு நேரம் பணிபுரிகிறேன். மிகவும் ஆர்வத்துடன் என்னுடைய அலுவலகத்துக்கு தினமும் சென்று வருகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.