அவரசப்பட்டு ஓய்வை அறிவித்துவிட்டேன் எனப் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.
ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் 35 வயது சானியா மிர்சா. இரட்டையர் பிரிவில் உலகளவில் நெ.1 வீராங்கனையாகவும் இருந்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. கடந்த வருடம் செப்டம்பரில் இரட்டையர் ஆட்டத்தில் 43-வது பட்டம் வென்றார்.
இந்த வருடத்துடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார் சானியா மிர்சா. 2022 ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் ஆட்டத்தின் முதல் சுற்றில் நாடியாவுடன் இணைந்து விளையாடி தோல்வியடைந்தார். அடுத்ததாக ராஜீவ் ராமுடன் இணைந்து கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் விளையாடினார். சானியா மிர்சா - ராஜீவ் ராம் இணை, காலிறுதியில் தோற்று வெளியேறியது.
இதுவே எனது கடைசிப் பருவம் என முடிவெடுத்துள்ளேன். ஒவ்வொரு வாரமாகக் கடந்து வருகிறேன். முழுப் பருவமும் விளையாடுவேனா எனத் தெரியாது. ஆனால் விளையாட நினைக்கிறேன். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. என் மகனுக்கு மூன்று வயது. இந்த வயதில் அவனை என்னுடன் அழைத்துக்கொண்டு பல ஊர்களுக்குச் செல்கிறேன். இதை நான் மனத்தில் கொள்ள வேண்டும். என்னுடைய உடல் சோர்வடைந்து வருகிறது. வயது அதிகமாவதால் காயமானால் உடனடியாக அதிலிருந்து குணமாக முடிவதில்லை என்று சமீபத்தில் பேட்டியளித்தார் சானியா மிர்சா.
இந்நிலையில் அவரசப்பட்டு ஓய்வை அறிவித்துவிட்டேன் என சானியா மிர்சா கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
ஒவ்வொரு ஆட்டத்தின்போதும் ஓய்வைப் பற்றி எண்ணுவதில்லை. உண்மையில் ஓய்வு அறிவிப்பை சீக்கிரமே அறிவித்துவிட்டேன். அதை எண்ணி வருத்தப்படுகிறேன். வெற்றி பெறுவதற்காகவே டென்னிஸ் ஆட்டத்தில் விளையாடுகிறேன். நான் விளையாடும் வரை வெற்றிக்காக முயல்வேன். விளையாடும்போது ஓய்வு பற்றி எண்ணுவதில்லை. வெற்றியோ தோல்வியோ டென்னிஸை ரசித்து விளையாடுகிறேன் என்றார்.