டெஸ்ட் அணியிலிருந்து நெ. 2 வீரர் அஸ்வினை நீக்கும்போது நெ.1 வீரரான கோலியையும் நீக்க முடியும் என முன்னாள் வீரர் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏபிபி நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கபில் தேவ் கூறியதாவது:
தேர்ந்தெடுக்க நிறைய வீரர்கள் இருக்கும்போது சமீபகாலமாக நன்கு விளையாடிய வீரர்களையே அணியில் சேர்க்க வேண்டும். ஒரு வீரருக்கு உள்ள மதிப்பை மட்டும் பார்க்க வேண்டாம். சமீபகாலமாக எப்படி விளையாடுகிறார் என்பதையே பார்க்க வேண்டும். நீங்கள் புகழ்பெற்ற வீரராக இருக்கலாம். ஆனால் ஐந்து ஆட்டங்களில் தொடர்ந்து சரியாக விளையாடாதபோதும் உங்களுக்கு வாய்ப்பு தரப்படவேண்டும் என எண்ணக் கூடாது.
இப்போது இந்திய டி20 அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்வது கடினமான பணி தான். கோலி நன்றாக விளையாட வேண்டும். உலகின் நெ. 2 பந்துவீச்சாளரான அஸ்வின், டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்படும்போது உங்களுடைய நெ. 1 பேட்டரையும் அணியிலிருந்து நீக்கலாம். நமக்குத் தெரிந்த கோலி போல இப்போது அவர் விளையாடுவதில்லை. அவர் சரியாக விளையாடாவிட்டால் இளம் வீரர்களைத் தொடர்ந்து வெளியில் வைத்திருக்க முடியாது. கோலி போன்ற ஒரு வீரர் மீண்டு வருவார் என நம்புகிறேன். அவர் சரியாக விளையாடாவிட்டால் அணியிலிருந்து நீக்கிவிடலாம். அஸ்வினை வெளியேற்றுகிறீர்கள் என்றால் யாரையும் வெளியேற்ற முடியும் என்றார்.