சர்வதேச ஆட்டங்களைத் தவிர்க்கும் இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டியில் மட்டும் எப்படி முழுமையாகப் பங்கேற்கிறார்கள் என்கிற கேள்வியை முன்னாள் வீரர் கவாஸ்கர் எழுப்பியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பிரபல வீரர்களான கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, பாண்டியா, ரிஷப் பந்த் ஆகியோர் பங்கேற்கவில்லை. தொடர்ச்சியாக விளையாடுவதால் இந்தத் தொடரிலிருந்து அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து ஒரு பேட்டியில் முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியதாவது:
வீரர்களுக்கு ஓய்வளிப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஐபிஎல் போட்டியில் விளையாடும்போது அவர்கள் ஓய்வெடுப்பதில்லை. எனில் இந்தியாவுக்காக விளையாடும்போது மட்டும் ஓய்வை எதிர்பார்ப்பது ஏன்? இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்தியாவுக்காக விளையாட வேண்டுமென்றால் ஓய்வு பற்றி பேசக்கூடாது.
டி20யில் 20 ஓவர்கள் மட்டுமே உள்ளன. இதனால் உங்கள் உடல் சோர்வடையாது. டெஸ்டில் விளையாடினால் மனமும் உடலும் சோர்வுக்கு ஆளாகும். அதைப் புரிந்து கொள்கிறேன். டி20யில் எந்தப் பிரச்னையும் இல்லை. வீரர்களுக்கு ஓய்வளிப்பது குறித்து பிசிசிஐ மறுபரிசீலனை செய்யவேண்டும். ஏ கிரேடில் உள்ள வீரர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. எல்லா ஆட்டங்களுக்கும் அவர்களுக்குச் சம்பளம் அளிக்கப்படுகிறது. எந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநருக்கு இவ்வளவு சம்பளம் கிடைக்கிறது? இந்திய கிரிக்கெட் தொழில்முறை சார்ந்து விளையாட வேண்டுமென்றால் ஒரு கட்டுப்பாடு இருக்கவேண்டும். வீரருக்கு ஓய்வு தேவைப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதங்கள் குறைக்கப்பட வேண்டும். இந்திய அணிக்காக விளையாட மாட்டேன் என எப்படி ஒருவர் சொல்ல முடியும்? இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார்.