ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கை குறித்து ரசிகர்களிடம் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் மிதாலி ராஜ்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல வீராங்கனை மிதாலி ராஜ் சமீபத்தில் அறிவித்தார். இந்திய மகளிர் அணிக்காக 12 டெஸ்டுகள், 232 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக இந்திய அணி பங்கேற்ற 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் விளையாடினார்.
தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ராஜ், ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஹைதராபாத்துக்கு இடம்மாறியது. 1999, ஜூன் 26 அன்று, 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் மிதாலி ராஜ்.
மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக சபாஷ் மித்து உருவாகியுள்ளது. தயாரிப்பு - வியாகாம்19 ஸ்டூடியோஸ். மிதாலி ராஜ் வேடத்தில் டாப்சி நடித்துள்ள படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ளார். நாளை வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் மிதாலி ராஜ்.
சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்ததால் நீங்கள் செய்ய முடியாத ஒன்றை (பழக்கம், உணவு) ஓய்வுக்குப் பிறகு செய்தது என்ன?
ஜிலேபி, நூடுல்ஸ் சாப்பிடுவது.
கிரிக்கெட் விளையாடாமல் இருப்பது எப்படி?
(கிரிக்கெட் வாழ்க்கையில்) உலகக் கோப்பையை வெல்ல முடியாததைத் தவிர வேறு எந்த வருத்தமும் இல்லை. ஓய்வு அறிவிப்பு என்பது திடீர் முடிவல்ல. விளையாட்டில் நான் தொடர்ந்து இருப்பேன். பொறுப்புகள் தான் வேறுபடும். எனக்கான அடுத்த பணிகளுக்காக ஆர்வத்துடன் உள்ளேன் என்று கூறியுள்ளார்.