அமெரிக்காவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் விளையாட்டில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தப் போட்டியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்துள்ள பதக்கம் இதுவாகும். இதற்கு முன், நீளம் தாண்டுதல் நட்சத்திரம் அஞ்சு பாபிஜார்ஜ் கடந்த 2003-இல் பாரீஸில் நடைபெற்ற போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது நினைவுகூரத்தக்கது.
ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று, ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருந்த நீரஜ் சோப்ரா, தற்போது உலக சாம்பியன்ஷிப்பிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.
இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் கிரனாடா வீரரும், நடப்பு சாம்பியனுமான ஆண்டர்சன் பீட்டர்ஸ் சிறந்த முயற்சியாக 90.54 மீட்டர் தூரத்தை எட்டி முதலிடம் பிடிக்க, நீரஜ் சோப்ரா தனது சிறந்த முயற்சியாக 88.13 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து 2-ஆம் இடம் பிடித்தார். செக் குடியரசின் ஜேக்கப் வாலெஜ் 88.09 மீட்டருடன் வெண்கலம் பெற்றார்.
மற்றொரு இந்தியர்: இப்பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரான ரோஹித் யாதவ், சிறந்த முயற்சியாக 78.72 மீட்டரை எட்டி, மொத்தம் பங்கேற்ற 12 பேரில் 10-ஆவது வீரராக வந்தார்.
இறுதிச்சுற்றில் முதலில் நீரஜ் சற்றுத் தடுமாறினார். முதல் முயற்சியை "ஃபெüல்' செய்த அவர், அடுத்த இரு முயற்சிகளில் முறையே 82.39 மீ, 86.37 மீட்டரை எட்டி 4-ஆவது இடத்தில் இருந்தார். பின்னர் 4-ஆவது முயற்சியில் சிறந்த தூரமாக 88.13 மீட்டரை எட்டிய சோப்ரா, 2-ஆவது இடத்துக்கு முன்னேறி அதிலேயே இறுதிவரை நிலைத்தார். கடைசி இரு முயற்சிகளையும் அவர் பெüல் செய்தார்.
பதக்கம் வழங்கும் நிகழ்வின்போது, நீரஜ் சோப்ராவுக்கு இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அடிலே சுமரிவாலா பதக்கத்தை அணிவித்தார். அப்போது மைதானத்திலிருந்த இந்திய ரசிகர்கள் பலரும், இந்திய அணியினரும் உற்சாக கோஷமிட்டனர்.