2023-2027 ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை தொடர்பான இணைய வழி ஏலம் வரும் ஞாயிறன்று (ஜூன் 12) நடைபெறவுள்ளது. இந்த 5 ஆண்டுகளில் 410 ஆட்டங்களை நடத்தவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றுக்கான இந்திய மற்றும் இதர நாடுகளுக்கான ஒளிபரப்பு உரிமை, இணைய வழி ஏலம் மூலமாக வழங்கப்படும்.
ஐபிஎல் 2022 போட்டியில் மொத்தமாக 74 ஆட்டங்கள் நடைபெற்றன. ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008-ம் வருடம் 59 ஆட்டங்களே நடைபெற்றன. 2023, 2024 ஆகிய இரு ஆண்டுகளில் தலா 74 ஆட்டங்களை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. அதற்கடுத்த இரு ஆண்டுகளில் தலா 84 ஆட்டங்களை நடத்தவும் திட்டுமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிக்குக் கிடைக்கும் தொடர் ஆதரவு காரணமாக ஆட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்து கூடுதல் வருமானத்தை ஏற்படுத்துவதற்காக இம்முடிவுகளை பிசிசிஐ எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
2023-2027 ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையைப் பெறுவதற்காக டிஸ்னி ஸ்டார், சோனி, ஸீ, வியாகாம், அமேசான், ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.
ஐபிஎல் போட்டி முதல் 10 வருடங்களுக்கு சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதற்கான உரிமையை ரூ. 8,200 கோடிக்குப் பெற்றது. 2017-ல் ஸ்டார் இந்தியா, ரூ. 16,347.5 கோடிக்கு ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை அடுத்த ஐந்து வருடங்களுக்குப் (2018-22) பெற்றது. இதனால் இம்முறையும் அதிகமான தொகைக்கு ஐபிஎல் உரிமையைப் பெற நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலப் போட்டியிலிருந்து அமேசான் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஒளிபரப்பு உரிமையைப் பெறுவதற்கான போட்டியில் ரிலையன்ஸ், டிஸ்னி ஸ்டார், சோனி ஆகிய நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளதாகத் தெரிகிறது.