சூரத்தில் பயிற்சியைத் தொடங்கும் சிஎஸ்கே வீரர்கள்: காரணம் என்ன?

கேப்டன் தோனி உள்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சூரத்தில் தங்களுடைய பயிற்சியை மேற்கொள்ளவுள்ளார்கள். 
தோனி (கோப்புப் படம்)
தோனி (கோப்புப் படம்)

கேப்டன் தோனி உள்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சூரத்தில் தங்களுடைய பயிற்சியை மேற்கொள்ளவுள்ளார்கள். 

ஐபிஎல் போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 70 லீக் ஆட்டங்கள் மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புணேவில் நடைபெறவுள்ளன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடவுள்ளன. குரூப் ஏ-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி-வில் சென்னை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. சிஎஸ்கே அணி - மும்பை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. (2022 ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைந்துள்ளன.)

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் சிஎஸ்கே வீரர்கள் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியை மேற்கொள்ளவுள்ளார்கள். இதற்காக சூரத்துக்கு தோனியும் சிஎஸ்கே வீரர்களும் வருகை தந்துள்ளார்கள். மும்பைக்கும் சூரத்துக்கும் சுமார் 275 கி.மீ. என்பதால் அங்கிருந்து விரைவாகச் செல்வதற்கும் வசதியாக இருக்கும். மேலும் மஹாராஷ்டிரத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால் அதே சூழல் சூரத்திலும் உள்ளதாலும் இந்நகரில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளார்கள். சென்னை ஆடுகளங்களுக்கும் மும்பை, புணே ஆடுகளங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளதால் மும்பை ஆடுகளத்தின் தன்மையைக் கொண்ட சூரத் ஆடுகளங்களில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்கிற முக்கியக் காரணத்துக்காகவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 8 முதல் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியைத் தொடங்குவார்கள் என சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதனால் அவரவர் ஊர்களிலிருந்து வந்துள்ள சிஎஸ்கே வீரர்கள் 5 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு பயிற்சியைத் தொடங்கவுள்ளார்கள். மார்ச் 12 அன்று சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சூரத்துக்கு வருகை தரவுள்ளார். 

ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவும் கொல்கத்தா அணியும் மோதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சாலை வழியாக மே 20 அன்று மும்பைக்குச் செல்லவுள்ளார்கள் சிஎஸ்கே வீரர்கள்.

சூரத்துக்கு தோனி உள்பட சிஎஸ்கே வீரர்கள் வருகை தந்தது குறித்து விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com