ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் உலகின் நெ.1 வீரரிடம் தோல்வியடைந்த இந்திய இளம் வீரர் லக்ஷயா சென்னுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் பிரபலம் சச்சின் டெண்டுல்கர்.
பிர்மிங்கமில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் டென்மார்க்கைச் சேர்ந்த உலகின் நெ.1 வீரர் விக்டர் அக்ஸல்சென்னிடம் மோதினார் லக்ஷயா சென். 21-10, 21-15 என எளிதான முறையில் வென்று 2-வது முறையாக ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் பட்டத்தை வென்றார் விக்டர். இருவரும் இதுவரை மோதிய ஆட்டங்களில் 5-ல் விக்டரும் ஓர் ஆட்டத்தில் லக்ஷயாவும் வென்றுள்ளார்கள். 21 வருடங்களுக்கு முன்பு ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியை வென்றார் இந்தியாவின் கோபிசந்த். அதற்குப் பிறகு மீண்டும் இன்னொரு இந்தியர் பட்டம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தார்கள் ரசிகர்கள். ஆல் இங்கிலாந்து இறுதிச்சுற்றில் பங்கேற்ற 4-வது வீரர் என்கிற பெருமையைப் பெற்றார் 20 வயது லக்ஷயா சென்.
இந்நிலையில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய லக்ஷயா சென்னுக்குப் பாராட்டு தெரிவித்து சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்ததாவது:
வாழ்க்கையில் தோல்விகள் என்பதே இல்லை. நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அல்லது கற்றுக்கொள்வீர்கள். இந்த அனுபவத்தின் மூலமாக நீங்கள் நிறைய கற்றுக்கொண்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன் லக்ஷயா சென். அடுத்து விளையாடவுள்ள போட்டிகளில் மேலும் சாதிக்க வாழ்த்துகள் என்றார்.