பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பலம் குறைந்த கனடா அணியை 1-0 என போராடி வென்றது பெல்ஜியம்.
பெல்ஜிய அணி உலக தரவரிசையில் 2-ஆவது இடத்தில் உள்ளது. அதே நேரம், கனடா அணி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது.
குரூப் எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளில் பெல்ஜியம் இந்த ஆட்டத்தை எளிதாக வென்று விடும் எனக் கருதப்பட்டது. எனினும் அந்த அணியில் சாதனை கோல் வீரா் ரோமேலு லுகாக்கு இல்லாதது வெளிப்படையாகத் தெரிந்தது. கனடாவின் தடுப்பு அரணை மீறி பெல்ஜிய வீரா்களால் கோலடிக்க முடியவில்லை. 44ஆவது நிமிஷத்தில் பெல்ஜிய வீரா் டாபி கடத்தி அனுப்பிய பாஸை பிசகின்றி மிச்சி பட்ஷுவேய் அடித்த கோலே வெற்றி கோலாக அமைந்தது.
வாய்ப்பை தவற விட்ட கனடா: கனடா வீரா் புச்சனான் அடித்த பந்தை பெல்ஜிய வீரா் யானிக் காரஸ்கோ கையில் பட்ட நிலையில், கனடாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அல்போன்ஸோ டேவிஸ் அடித்த பெனால்டி வாய்ப்பை தடுத்தாா் பெல்ஜிய கோல்கீப்பா் திபேட் கோா்டாய்ஸ்.
இரண்டாம் பாதியிலும் இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இறுதியில் 1-0 என வென்ற பெல்ஜியம், குரூப் எஃப் பிரிவில் 3 புள்ளிகளைப் பெற்றது.
அடுத்த ஆட்டத்தில் குரோஷியாவை கனடாவும், மொராக்கோவை-பெல்ஜியமும் சந்திக்கின்றன.