சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 300 முறை இலக்கை வெற்றிகரமாக விரட்டிய முதல் அணி என்கிற சாதனையைப் படைத்துள்ளது இந்திய அணி.
ராஞ்சியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. டாஸ் வென்ற தெ.ஆ. அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 74, மார்க்ரம் 79 ரன்கள் எடுத்தார்கள். சிராஜ் நன்குப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி, 45.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷன் 93 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயஸ் ஐயர் 113, சஞ்சு சாம்சன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். சதமடித்த ஷ்ரேயர் ஐயர், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது. கடைசி ஒருநாள் ஆட்டம் தில்லியில் நாளை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இலக்கை விரட்டுவதில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது இந்திய அணி. ஒருநாள் கிரிக்கெட்டில் 300 முறை இலக்கை வெற்றிகரமாக விரட்டிய முதல் அணி என்கிற சாதனையைப் படைத்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் இலக்கை அதிகமுறை விரட்டிய அணிகள்
இந்தியா 300 (519)
ஆஸ்திரேலியா 257 (414)
மே.இ. தீவுகள் 237 (456)
பாகிஸ்தான் 235 (444)
இங்கிலாந்து 223 (383)
தென்னாப்பிரிக்கா 195 (316)
இலங்கை 193 (407)
நியூசிலாந்து 185 (363)
வங்கதேசம் 76 (193)
ஜிம்பாப்வே 73 (269)
அயர்லாந்து 44 (89)
ஆப்கானிஸ்ஹான் 36 (66)