டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து - அயர்லாந்து ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால், டக்வர்த் லீவிஸ் ஸ்டெர்ன் (டிஎல்எஸ்) முறைப்படி அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் உள்ள இங்கிலாந்து அணியும், அயர்லாந்து அணியும் இன்று (புதன்கிழமை) மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஆண்ட்ரூவ் பால்பிர்னி 62 ரன்கள் குவித்தார்.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மார்க் வுட், லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸும் 6 ரன்களில் வெளியேற 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தவித்தது.
இதையும் படிக்க | ஜிம்பாப்வேவைக் காப்பாற்றிய மழை: டி காக் மிரட்டல் அடி வீண்!
இதற்கிடையே டேவிட் மலானும், ஹேரி ப்ரூக்கும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது.
மழை தொடர்ந்து பெய்ததால், டிஎல்எஸ் முறைப்படி ஸ்கோர் கணக்கிடப்பட்டது. 14.3 ஓவர்களில் இங்கிலாந்து 111 ரன்களை எடுத்திருக்க வேண்டும். ஆனால், 105 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால், இந்த ஆட்டத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் குரூப் 1 பிரிவில் 2 புள்ளிகளை பெற்று அயர்லாந்து அணி 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஏற்கெனவே ஜிம்பாப்வே உடனான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெறும் தருவாயில் மழை குறிக்கிட்டதால், ஆட்டம் நிறுத்தப்பட்டு இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதேபோல், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மொயின் அலியும், லிவிங்ஸ்டனும் களத்திலும், அடுத்து சாம் கரனும் இருப்பதால் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ள நிலையில், டிஎல்எஸ் முறைப்படி அயர்லாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.