2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பே ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆரோன் ஃபிஞ்ச் விளக்கம் அளித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார்.
35 வயது ஃபிஞ்ச், ஆஸி. அணிக்காக 2011 முதல் 5 டெஸ்டுகள், 145 ஒருநாள், 92 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டனாகவும் உள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் தொடர் நாளையுடன் முடிவடைகிறது. 2-0 என முன்னிலை பெற்று ஒருநாள் தொடரை வென்றுள்ளது ஆஸ்திரேலியா. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள கடைசி ஒருநாள் ஆட்டத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச் அறிவித்துள்ளார். எனினும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் அறிவித்துள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸி. அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த வருடம் 13 ஆட்டங்களில் விளையாடி 1 அரை சதத்துடன் 169 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் ஃபிஞ்ச். கடந்த 12 இன்னிங்ஸில் 5 முறை டக் அவுட் ஆகியுள்ளார். கடைசி 7 இன்னிங்ஸில் 26 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறியப்படுகிறது.
2023 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பே ஓய்வு பெறுவது ஏன் என்கிற கேள்விக்கு ஃபிஞ்ச் பதில் அளித்ததாவது:
2023 உலகக் கோப்பைப் போட்டிக்கு அடுத்த கேப்டன் தயாராவதற்கான அவகாசத்தை அளிக்க இதுவே சரியான நேரம். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்று, மெல்போர்ன் மைதானத்தில் கடைசி ஆட்டத்தை விளையாடி ஓய்வு பெற்றிருந்தாலும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் என் விருப்பம் மட்டுமே முக்கியமல்ல. அடுத்து யார் கேப்டன் ஆகிறாரோ யார் அடுத்த தொடக்க வீரரோ அவர்களுக்குச் சரியான வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் தான் 2023 உலகக் கோப்பையை வெல்ல முடியும். என்னுடைய காயங்கள் மற்றும் சமீபகாலமாக நான் விளையாடும் விதம் போன்றவற்றால் நான் உலகக் கோப்பைப் போட்டி வரை விளையாட மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன் என்றார்.