ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் விக்கெட்டை வீழ்த்திய பிறகு போட்டியில் வெற்றி பெறும் நம்பிக்கை வந்ததாக இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் நிறைவு செய்தது. நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் ஆட்டத்தின் இறுதி ஓவரை அர்ஷ்தீப் சிங் சிறப்பாக வீசினார்.
முதல் மூன்று ஓவர்களில் 37 ரன்களை விட்டுக் கொடுத்த அர்ஷ்தீப் கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் விக்கெட்டை வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்து இந்திய அணிக்கு வெற்றியைத் தந்தது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் விக்கெட்டை வீழ்த்திய பிறகு போட்டியில் வெற்றி பெறும் நம்பிக்கை வந்ததாக இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: 2024-ஐபிஎல் போட்டிகளில் ஜோப்ரா ஆர்ச்சர் பங்கேற்பாரா?
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பந்துவீசுவதற்கு ஏற்ற சாதகமான சூழல் பெரிதாக இல்லை. என்னால் தொடக்கத்தில் அதன் காரணமாகவே சரியாக பந்துவீச முடியவில்லை. ஒரு பந்துவீச்சாளராக பேட்ஸ்மேன்களுக்கு சவாலளிக்கும் விதமாக கடைசி ஓவரின் முதல் பந்தை பௌன்சராக வீசினேன். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் விக்கெட்டை வீழ்த்திய பிறகு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை வந்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் வீரர்களை சுதந்திரமாக விளையாட அறிவுறுத்தினார். ஆட்டத்தின் முடிவினைப் பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக பந்துவீசுமாறு அவர் கூறினார் என்றார்.