கடந்த இரண்டு ஆண்டுகளாக மங்கலான பார்வையுடன் கிரிக்கெட் விளையாடியதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
தனது மகனுடன் விளையாடியபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் வலது கண்ணில் பலமாக அடிபட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மங்கலான பார்வையுடன் கிரிக்கெட் விளையாடியதாக அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் பேசியிருப்பதாவது: நான் எனது கண்ணில் அடிபட்ட விஷயத்தை சாதரணாமகவே கூறினேன். நான் சாதரணமாக கூறிய விஷயம் தலைப்புச் செய்தியாகிவிடாது என நம்புகிறேன். நான் கூறியது சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். எனது இளைய மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, எனது மூத்த மகன் எனது வலது கண்ணில் உதைத்துவிட்டான். அப்போது அந்த சம்பவம் குறித்து நான் பெரிதாக யோசிக்கவில்லை.
கண்ணில் எனது மகன் உதைத்தவுடன் நான் அதிர்ச்சியில் கண்ணை கையால் மூடிக் கொண்டேன். எனது கண்ணுக்கு ஏதோ ஆகிவிட்டது என பயந்தேன். அதன்பின் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். பிறகு ஐபிஎல் தொடர்களில் கடந்த 2-3 ஆண்டுகளாக விளையாடும்போது எனது வலது கண் பார்வை மங்கலாக இருப்பதை உணர்ந்தேன். அதன்பின் கண் மருந்து எடுத்துக் கொண்டேன். எனது இடது கண் நன்றாக இருந்ததால் என்னால் கிரிக்கெட் விளையாட முடிந்தது என்றார்.