இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்ததற்கான எந்த ஒரு எழுத்துப்பூர்வ ஆவணத்தையும் இதுவரை பார்க்கவில்லை எனவும், மல்யுத்த வீரர்களின் போராட்டம் அரசுக்கு எதிரானது இல்லை எனவும் முன்னாள் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் மல்யுத்த வீரர்களுக்கான முறையான அறிவிப்புகளைக் கூட வழங்காமல் 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளை ஏற்பாடு செய்வதாக வெளியிட்ட அவசர அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்ததற்கான எந்த ஒரு எழுத்துப்பூர்வ ஆவணத்தையும் இதுவரை பார்க்கவில்லை எனவும், மல்யுத்த வீரர்களின் போராட்டம் அரசுக்கு எதிரானது இல்லை எனவும் முன்னாள் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் முன்னாள் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் பேசியதாவது: மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன். ஆனால், இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது தொடர்பான எழுத்துப்பூர்வ ஆவணம் எதையும் நான் பார்க்கவில்லை. சஞ்சய் சிங் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாரா அல்லது மொத்த சம்மேளனமும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதா என்பது எனக்குத் தெரியாது. எங்களது போராட்டம் அரசாங்கத்துக்கு எதிரானது கிடையாது. எங்களது போராட்டம் மல்யுத்த வீராங்கனைகளுக்கானது. நான் மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டேன். ஆனால், எதிர்காலத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார்.