ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அடைந்த அதிர்ச்சித் தோல்வியின் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பை இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை அண்மையில் வெளியானது. வரும் அக்டோபா் 5-ஆம் தேதி போட்டி தொடங்கி நவம்பா் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் 8 அணிகள் உலக சூப்பா் லீக் மூலம் தோ்ச்சி பெற்றன. தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் குவாலிஃபையா் போட்டியில் இரண்டு அணிகள் தகுதி பெறும்.
இந்த நிலையில், ஸ்காட்லாந்துக்கு எதிராக இன்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் மேற்கிந்திந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் இழந்துள்ளது.
முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். இறுதியில் மேற்கிந்திந்தியத் தீவுகள் அணி 43.5 ஓவர்களில் 181 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்காட்லாந்து 43.3 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ கிராஸ் 74 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரைத் தொடர்ந்து பிரண்டன் மெக்முல்லன் அதிகபட்சமாக 69 ரன்கள் எடுத்திருந்தார்.
ஏற்கனவே ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்திடம் தோல்வியடைந்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் இன்றையப் போட்டியில் ஸ்காட்லாந்திடம் தோற்றதன் மூலம் 48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்துள்ளது.
கடந்த 1975 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.