ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத பட்சத்தில் சூர்யகுமார் யாதவை இந்திய அணி உலகக் கோப்பையில் 4-வது இடத்தில் களமிறக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார்.
ஜியோ சினிமா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க:கலாட்டாக்காரன் - கிங்க் ஆஃப் கோதா முதல் பாடல் வெளியீடு
அப்போது அவர் பேசியதாவது: சூர்யகுமார் யாதவ் உலகக் கோப்பையில் இல்லாமல் இருப்பது சரியான முடிவாக இருக்காது. 4-வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயருடன் (முழு உடல்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில்) களமிறங்கி விளையாடுவதற்கு அவர் ஒரு சிறந்த தெரிவாக இருப்பார். உலகக் கோப்பைப் போட்டிக்கு சூர்யகுமார் யாதவை வேறு இடங்களில் களமிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருப்பினும் அவருக்கு அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யகுமார் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். 4-வது அல்லது 5-வது இடத்தில் இறங்குவது சரியான தெரிவாக இருக்கும். தற்போது டி20 போட்டியில் சுர்யகுமார் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். ஆனால், ஒருநாள் போட்டி என்பது வித்தியாசமானது. அதிக பந்துகளை எதிர்கொண்டு களத்தில் நிலைத்து நின்று ஆட வேண்டியிருக்கும். அதற்கு ஏற்றவாறு அவரது ஆட்டத்தை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது 4-வது இடத்தில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சரியான வீரர்கள் இந்திய அணியில் இல்லாததும் இந்தியாவினால் உலகக் கோப்பையை வெல்ல முடியாததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.