ஆஷஸ் டெஸ்டில் புதிய உலக சாதனை ஒன்றை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஆஷஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் மூன்றாம் நாளான நேற்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒரு ஆஷஸ் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதையும் படிக்க: கடைசி ஆஷஸ் போட்டி: ஆஸி. வெற்றி பெற 384 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியபோது பென் ஸ்டோக்ஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். நேற்றையப் போட்டியில் அவர் அடித்த சிக்ஸர் இந்த உலக சாதனையைப் படைக்க உதவியது. இந்த ஆஷஸ் தொடர் முழுவதும் அவர் மொத்தமாக 15 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஒரு ஆஷஸ் தொடரில் தனிநபர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும்.
இதற்கு முன்னதாக, கடந்த 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் கெவின் பீட்டர்சன் ஆஷஸ் தொடரில் 14 சிக்ஸர்கள் அடித்திருந்ததே தனி ஒருவரால் ஆஷஸ் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களாக இருந்தது. தற்போது அவரது இந்த சாதனையை பென் ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.