இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகளில் விளைடாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று (ஜூன் 2) இலங்கையின் மகிந்த ராஜபட்ச சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை தரப்பில் சரித் அசலங்கா அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து தனஞ்ஜெயா டி சில்வா 51 ரன்களும், பதும் நிசங்கா 38 ரன்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபசல்ஹக் ஃபரூக்கி மற்றும் ஃபரீத் அகமது தலா 2 விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது ஆப்கானிஸ்தான். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹமனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ரஹீம் ஸத்ரான் களமிறங்கினர். குர்பாஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், இப்ரஹீமுடன் ஜோடி சேர்ந்தார் ரஹ்மத் ஷா. இந்த இணை சிறப்பாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். ரஹ்மத் ஷா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய இப்ரஹீம் 98 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவர் 98 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் 46.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றியைப் பதிவு செய்தது. சிறப்பாக ஆடி 98 ரன்கள் குவித்த இப்ரஹீமுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையும் படிக்க: பொம்மை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இந்த ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இலங்கை அணிக்கு இந்த ஒரு நாள் தொடர் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.