இந்தூர் டெஸ்டில் கள நடுவர்களின் ஆறு தவறுகள் டிஆர்எஸ் முறையீட்டின் வழியாகச் சரிசெய்யப்பட்டன.
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. 3-வது நாளில் ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து அபார வெற்றியை அடைந்தது. ஹெட் 49, லபுஷேன் 28 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த டெஸ்டில் மொத்தமாக 11 விக்கெட்டுகள் எடுத்த லயன், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 3-வது டெஸ்டை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்தூர் டெஸ்டில் நடுவர்களின் தவறான ஆறு முடிவுகள் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தால் சரிசெய்யப்பட்டுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா என இரு அணிகளும் டிஆர்எஸ் முறையீடுகளின் மூலம் தலா 3 முடிவுகளை மாற்றியுள்ளன. இதுதவிர இந்தூர் டெஸ்டின் முதல் ஓவரில் நடுவர் நிதின் மேனனின் இரு தவறான முடிவுகளையும் மேல்முறையீடு செய்யாமல் விட்டுவிட்டது ஆஸ்திரேலியா. அதேபோல இந்திய அணியும் நிதின் மேனனின் ஒரு தவறை அறியாமல் இருந்ததால் ஒரு விக்கெட்டை எடுக்கும் வாய்ப்பை இழந்தது.
இந்தூர் டெஸ்டில் இந்திய அணி 9 முறையும் ஆஸ்திரேலிய அணி 7 முறையும் கள நடுவர்களின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஆர்எஸ் வழியாக மேல்முறையீடு செய்தன. அதில் இரு அணிகளுக்கும் தலா 3 வெற்றிகள் கிடைத்தன.
நடுவர் ஜோயல் வில்சனின் 11 முடிவுகளுக்கு டிஆர்எஸ் பயன்படுத்தப்பட்டது. அதில் 4 முறை நடுவரின் முடிவுகள் மாற்றப்பட்டன. அதேபோல நிதின் மேனனின் இரு முடிவுகள் டிஆர்எஸ் வழியாக மாற்றப்பட்டன.