2023 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.
டெஸ்ட் தொடருக்கு அடுத்ததாக இந்தியாவில் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் மட்டும் ரோஹித் சர்மா விளையாடவில்லை. இதனால் மும்பையில் நடைபெறும் அந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக பாண்டியா செயல்படவுள்ளார்.
இந்நிலையில் பாண்டியா பற்றி முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியதாவது:
பாண்டியா கேப்டனாக இருக்கும்போது அணியில் உள்ளவர்கள் செளகரியமாக உணர்கிறார்கள். வீரர்களை நன்குக் கவனித்துக்கொள்வதினால் அப்படி இருக்கலாம். வீரர்கள் செளகரியமாக உணரும்போது அவர்களால் இயல்பாக விளையாட முடியும். வீரர்களை நன்கு ஊக்கப்படுத்துகிறார். பேட்டிங்கில் தாக்கம் ஏற்படுத்தும் வீரராக உள்ளார். குஜராத் அணியில் விளையாடியபோது முன்பே களமிறங்கி நடுவரிசையில் விளையாடினார். குஜராத் அணிக்கு அவர் தலைமை தாங்கிய விதம் எனக்கு மிகவும் பிடித்தது. அதேபோல இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்தபோதும். மும்பை ஒருநாள் ஆட்டத்தை பாண்டியா வென்றால், 2023 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் இவர் தான் என எண்ணலாம் என்றார்.