தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த சிஎஸ்கே 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இந்த ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. கான்வே மற்றும் கெய்க்வாட் தில்லி அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். பவர் பிளேவில் சிஎஸ்கே விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் குவித்தது. பவர் பிளே முடிந்த பிறகும் கான்வே மற்றும் ருதுராஜின் அதிரடி தொடர்ந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன்பின், கான்வேவுடன் ஜோடி சேர்ந்தார் சிவம் துபே. வந்த வேகத்தில் இரண்டு சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டினார். கலீல் அகமது பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்ற துபே, லலித் யாதவிடம் கேட்ச் ஆனார். அவர் 9 பந்துகளில் அதிரடியாக 22 ரன்கள் குவித்தார். அதில் 3 சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, சென்னை அணியின் கேப்டன் தோனி களமிறங்கினார். அதிரடியாக ஆடிய கான்வே 52 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின், தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தனர். ஜடேஜா களமிறங்கியது முதலே அதிரடி காட்டினார். அவர் 7 பந்துகளில் 20 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். கேப்டன் தோனி 5 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சிஎஸ்கே 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்குகிறது தில்லி கேப்பிடல்ஸ் அணி.