மும்பை வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 47 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த சுப்மன் கில் நியூசி. பந்துவீச்சை திணறடித்தார். பின், திடீரென ஏற்பட்ட தசைப்பிடிப்புக் காரணமாக தற்காலிக ஓய்வாக பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, ஷ்ரேயஸ் ஐயர் புதிய பேட்ஸ்மேனாக உள்ளே வந்தார்.
அதே நேரம், ரோகித்துக்குப் பின் களமிறங்கிய விராட் கோலி தன் சிறப்பான ஆட்டத்தால் பவுண்டரிகளை விளாசி நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தலைவலி கொடுக்க ஆரம்பித்தார்.
விரைவிலேயே தன் 72-வது அரைசதத்தை பதிவு செய்தவர், நிதானமாக ஆடி 108 பந்துகளில் 100 ரன்களை அடித்து சச்சின் டெண்டுல்கரின் 49 சதத்தை முறியடித்து தன் 50-வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி. இந்த சதத்தை அடித்தபின் வான்கடே மைதானத்திலிருந்து பெருவாரியான ரசிகர்கள் எழுந்து நின்று கோலிக்கு ஆரவாரம் செய்தனர். பின், 117 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக ஆடினாலும் ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 105 ரன்களை எடுத்தார். 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களை எடுத்து அசத்தியது இந்திய அணி. நியூசி. தரப்பில் அதிகபட்சமாக சௌதீ 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இமாலய இலக்கைத் துரத்த களமிறங்க உள்ளது நியூசிலாந்து!