ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக யசஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இந்த இணை சிறப்பாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய இஷான் கிஷன் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். அவர் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
சூர்யகுமார் யாதவ் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 43 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடியாக 9 பந்துகளில் 31 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) குவிக்க இந்திய அணி 200 ரன்களைக் கடந்து பயணித்தது.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. ரிங்கு சிங் 31 ரன்களுடனும், திலக் வர்மா 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்டொய்னிஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.