உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த வீரர்கள்!
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். மிட்செல் மார்ஷ் 0 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் வார்னருடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், வார்னர் 41 ரன்களிலும் (6 பவுண்டரிகள்), ஸ்மித் 46 ரன்களிலும் (5 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் மார்னஸ் லபுஷேன் (27 ரன்கள்), அலெக்ஸ் கேரி (0 ரன்கள்), கிளன் மேக்ஸ்வெல் (15 ரன்கள்), கேமரூன் கிரீன் (8 ரன்கள்) மற்றும் பாட் கம்மின்ஸ் (15 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிக் கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் 28 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களின் முடிவில் 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின், ஹார்திக் பாண்டியா மற்றும் முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.