ஒருநாள் போட்டியில் வெறும் 29 பந்துகளில் சதமடித்து ஆஸ்திரேலிய வீரர் சாதனை படைத்துள்ளார்.
லிஸ்ட் - ஏ கிரிக்கெட்டில் டஸ்மானியாவுக்கு எதிரான உள்ளூர் ஒருநாள் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலிய அணி வீரர் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலைடில் டஸ்மானியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி இன்று (அக்டோபர் 8) நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த டஸ்மானியா 9 விக்கெட்டுகளை இழந்து 435 ரன்கள் எடுத்தது.
436 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தெற்கு ஆஸ்திரேலியா 398 ரன்களுக்கு ஆட்டமிழந்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணியின் வீரர் ஜேக் ஃப்ரேசர் 29 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன்மூலம், லிஸ்ட் ஏ போட்டிகளில் 31 பந்துகளில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற டி வில்லியர்ஸின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
இதையும் படிக்க: ஜெயசூர்யா சாதனையை முறியடித்த மெண்டிஸ்!
இந்தப் போட்டியில் 38 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து ஜேக் ஃபிரேசர் ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்கள் அடங்கும்.
ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ஃபிரேசரின் இந்த அதிவேக சதம் உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க வீரர் மார்கரம் அதிவேக சதம் அடித்த அடுத்த நாளே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.