இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இருப்பினும், அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்வது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் கடந்த வாரம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால், உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கில் அணியில் இடம்பெறவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அவர் அணியில் இடம்பெறமாட்டார் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இரத்த தட்டையணுக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவாக சென்றதால் நேற்று முன் தினம் (அக்டோபர் 8) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை முன்னேற்றத்தை இந்திய அணியின் மருத்துவர் ரிஸ்வான் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
இதையும் படிக்க: மலான் சதம்: வங்கதேசத்துக்கு 365 ரன்கள் இலக்கு
இந்த நிலையில், ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. அவருக்கு ஒரு வாரத்திற்கும் மேல் ஓய்வு தேவைப்படுவதால் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியைத் தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் ஷுப்மன் கில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.