உலகக் கோப்பை அணியில் இந்திய தொடக்க வீரர்கள் ருதுராஜ் ஜெய்க்வாட் அல்லது யசஷ்வி ஜெய்ஸ்வால் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் ஷுப்மன் கில் இடம்பெற்றிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க இந்திய அணியுடன் கில் சென்னை வந்தார்.
காய்ச்சல் காரணமாக கில்லை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதனால், ஆஸ்திரேலியாவுடனான முதல் போட்டியில் கில் விளையாடவில்லை.
இந்த நிலையில், கில் உடலில் உள்ள தட்டணுக்கள் குறைந்துள்ளதால், ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. தொடர்ந்து, சென்னையிலேயே தங்கி சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தற்போது கில்லின் உடல்நிலை சீரடையாததால் அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெறும் பாகிஸ்தானுடனான போட்டியிலும் பங்கேற்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கில்லுக்கு பதிலாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் ரன் எடுக்காமல் அவுட்டானது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கில் உடல்நிலை சரியானாலும் போட்டியில் விளையாட சிறிது காலம் எடுக்கும் என்பதால், ருதுராஜ் அல்லது ஜெய்ஸ்வாலை இந்திய அணியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை தேர்வுக் குழு நடத்தி வருகின்றது.