உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பைத் தொடரில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று (அக்டோபர் 10) நடைபெற்று வரும் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷானகா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இலங்கை முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் குவித்த ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. குசால் பெரேரா 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின், பதும் நிசங்கா மற்றும் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. பதும் நிசங்கா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன்பின், குசால் மெண்டிஸுடன் ஜோடி சேர்ந்தார் சதீரா சமரவிக்ரம. இந்த இணை அதிரடியாக விளையாடி இலங்கை அணிக்கு வேகமாக ரன்களைக் குவித்தது. குசால் மெண்டிஸ் 65 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவர் 77 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சரித் அசலங்கா (1 ரன்), தனஞ்ஜெயா டி சில்வா (25 ரன்கள்), ஷானகா (12 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சதீரா சமரவிக்ரம சதம் விளாசி அசத்தினார். அவர் 89 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிக்க: உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த இலங்கை வீரர்!
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இலங்கை 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹாசன் அலி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹாரிஸ் ரௌஃப் 2 விக்கெட்டுகளையும், ஷகின் அப்ரிடி, முகமது நவாஸ் மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.