ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த இலங்கை அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
உலகக் கோப்பையில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். இந்த இணை இலங்கைக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. இலங்கை அணி 125 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது. சிறப்பாக விளையாடிய பதும் நிசங்கா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய கேப்டன் குசல் மெண்டிஸ் 9 ரன்களிலும், சதீரா சமரவிக்ரம 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசல் பெரேரா கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டானார். அவர் 82 பந்துகளில் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் சரித் அசலங்காவைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 43.3 ஓவர்களில் இலங்கை அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட கிரிக்கெட் உள்ளிட்ட 5 விளையாட்டுகள்!
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.