சூப்பர் 4 : வங்கதேசத்துக்கு 258 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்துக்கு எதிராக முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் குவித்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இலங்கை முதலில் பேட் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணாரத்னே களமிறங்கினர். இந்த இணை சீரான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், கருணாரத்னே 18 ரன்களிலும், பதும் நிசங்கா 40 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனையடுத்து, குஷால் மெண்டிஸ் மற்றும் சதீரா சமரவிக்கிரம ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி இலங்கை அணியின் ஸ்கோரினை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். குஷால் மெண்டிஸ் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அதன்பின் களமிறங்கியவர்களில், அசலங்கா ( 10 ரன்கள்), தனஞ்ஜெயா டி சில்வா ( 6 ரன்கள்), தாசுன் ஷானகா ( 24 ரன்கள்) ஆட்டமிழந்து வெளியேறினர். களமிறங்கியது முதலே சிறப்பாக விளையாடிய சதீரா சமரவிக்கிரம 72 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர் அடங்கும்.
இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் குவித்தது.
இதையும் படிக்க: விராட் கோலிக்கு சில்வர் பேட்டினை பரிசளித்த இலங்கை வீரர்!
வங்கதேசதம் தரப்பில் ஹாசன் மஹ்முத் மற்றும் டஸ்கின் அகமது தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷோரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் களமிறங்குகிறது.