
இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் துனித் வெல்லாலகே, அசலங்காவின் சூழலில் சிக்கி இந்திய அணி 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா-இலங்கை அணிகள் இன்று (செப்டம்பர் 12) விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். இந்த இணை அணிக்கு சீரான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், ஷுப்மன் கில் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 3 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின், ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 48 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல், இஷான் கிஷனுடன் இணைந்தார். இந்த இணை சீராக விளையாடிய போதிலும், கே.எல்.ராகுல் 39 ரன்களிலும், இஷான் கிஷன் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹார்திக் பாண்டியா (5 ரன்கள்), ஜடேஜா (4 ரன்கள்), பும்ரா (5 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் இறுதியில் அக்ஸர் படேல் 36 பந்துகளில் 26 ரன்கள் எடுக்க இந்திய அணி 200 ரன்களைக் கடந்தது.
இறுதியில் இந்திய அணி இலங்கை அணியின் சுழலை சமாளிக்க முடியாமல் 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அசலங்கா 4 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.