ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரராக மாறிய பென் ஸ்டோக்ஸ்!
ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஒரு ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த வீரராக பென் ஸ்டோக்ஸ் மாறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்தார். நேற்றையப் போட்டியில் நியூசிலாந்தை 181 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 124 பந்துகளில் 182 ரன்கள் குவித்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஒரு ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் பென் ஸ்டோக்ஸ் மாறியுள்ளார்.
இதையும் படிக்க: டெங்கு கடந்து வந்த பாதையும் ஏடிஸ் கொசுவும்! -1
இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜேசன் ராய் 180 ரன்கள் எடுத்ததே இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டி ஒன்றில் வீரர் ஒருவர் குவித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. தற்போது அதனை பென் ஸ்டோக்ஸ் மாற்றியுள்ளார். 3-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் மற்றும் டேவிட் மலன் 199 ரன்கள் சேர்த்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்காக ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக அண்மையில் தனது ஓய்வு முடிவை பென் ஸ்டோக்ஸ் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.