இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் குவித்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் குவித்தது.
இதையும் படிக்க: துனித் வெல்லாலகே மிகவும் அபாயகரமான பந்துவீச்சாளர்: கே.எல்.ராகுல்
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபகர் ஸமான் மற்றும் அப்துல்லா சஃபீக் களமிறங்கினர். ஃபகர் ஸமான் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து, முகமது ரிஸ்வான் களமிறங்கினார். தொடக்க ஆட்டக்காரரான அப்துல்லா சஃபீக் 69 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய முகமது ஹரிஷ் 3 ரன்களிலும், முகமது நவாஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் 130 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், முகமது ரிஸ்வான் மற்றும் இஃப்திகார் அகமது ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தானின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய இஃப்திகார் அகமது 40 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். களமிறங்கியது முதலே சிறப்பாக விளையாடிய முகமது ரிஸ்வான் 73 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் குவித்தது.
இலங்கை தரப்பில் மதீஷா பதிரானா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரமோத் மதுசன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.மஹீஷ் தீக்ஷனா மற்றும் துனித் வெல்லாலகே தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்குகிறது.