உலகக் கோப்பை தொடரில் ஹார்திக் பாண்டியாவின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்குமென இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. உலகக் கோப்பைக்கான அணி விவரங்களை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அண்மையில் அறிவித்தன. தற்போது ஆசியக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.
இதையும் படிக்க: 37வது பிறந்தநாள்: அஸ்வினின் சாதனைப் பட்டியல்!
இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில் ஹார்திக் பாண்டியாவின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்குமென இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது: ஹார்திக் பாண்டியா பக்குவம் நிறைந்த வீரராக வளர்ந்துள்ளார். உடல் தகுதியைப் பொருத்தவரை அவருக்கு சில பின்னடைவுகள் இருந்தாலும், அதனையெல்லாம் அவர் தனது கடின உழைப்பால் ஒன்றுமில்லால் செய்துவிட்டார். பொறுப்புகளை தனது தோளில் சுமந்து செல்லும் அளவுக்கு அவர் ஒரு சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். அவர் தற்போது இந்திய டி20 அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஒரு ஆல்ரவுண்டராக அவர் அணியில் இருப்பது அணியை சமபலத்துடன் இருக்கச் செய்கிறது. உலகக் கோப்பைக்கான இந்திய அணி சிறப்பானதாக உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா அணிக்குத் திரும்பியுள்ளார். முகமது சிராஜ் அணியில் இருக்கிறார். அனுபவம் வாய்ந்த முகமது ஷமி இருக்கிறார். ஹார்திக் பாண்டியாவும் இந்திய அணிக்காக பந்துவீச தயாராக இருக்கிறார். ஒட்டு மொத்தத்தில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி மிக சிறப்பானதாக உள்ளது என்றார்.