இந்திய கிரிக்கெட் அணி 1983க்குப் பிறகு உலகக் கோப்பை 2011இல் எம்எஸ் தோனி தலைமையில் வென்றது. இந்த அணியில் அப்போதைய இளம் வீரரான ரோஹித் சர்மா தேர்வாகவில்லை. இது குறித்து 2011இல் ரோஹித், “உலகக் கோப்பை அணியில் இல்லாதது குறித்து மிகுந்த வருத்தமளிக்கிறது. உண்மையிலேயே இது ஒரு பெரிய பின்னடைவு” எனக் கூறியிருந்தார்.
இது குறித்து நேர்காணல் ஒன்றில் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் ராஜா வெங்கட், “நாங்கள் தேர்வு செய்த 14 பேர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். 15ஆவது வீரராக நாங்கள் ரோஹித் சர்மாவை பரிந்துரைத்தோம். பயிற்சியாளர் கேரி கிறிஸ்டெனும் இதை சரி என உணர்ந்தார். ஆனால் கேப்டன் தோனி இவருக்கு பதிலாக சுழல் பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா வேண்டுமென்றார். பின்னர் பயிற்சியாளரும் அதை ஏற்றுக் கொண்டார். அதனால்தான் ரோஹித் அந்த அணியில் இடம்பெறவில்லை” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை போட்டிகளை இலவசமாக எதில் பார்க்கலாம்?
2013இல் ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக விளையாட வைத்து அவரது வாழ்க்கையை மாற்றியதும் எம்.எஸ்.தோனி என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். உலகின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக ரோஹித் சர்மா முன்னேறியுள்ளார்.
தோனி மாதிரி ரோஹித் சர்மாவும் உலகக் கோப்பையை இந்தியாவிற்கு வென்று தருவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.