ஆசியக் கோப்பையிலும், உலகக் கோப்பையிலும் கோப்பையை வெல்வதற்கு பாகிஸ்தான் அணி கடும் போட்டியாளராக இருக்கும் என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டங்களால் உலகக் கோப்பை தொடரில் மற்ற அணிகளுக்கு பாகிஸ்தான் அணி ஆபத்தானதாக மாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது யூடியூப் பக்கத்தில் பேசிய அஸ்வின் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஆசியக் கோப்பை வெற்றி விகிதத்தில் இலங்கை முதலிடம்: இந்தியா?
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் எனத் தோன்றுகிறது. பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் அவர்களது சிறப்பான தொடர்ந்து வெளிப்படுத்தினால், ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மற்ற அணிகளுக்கு கடும் போட்டியாளராக மாறிவிடும். பாகிஸ்தான் அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள், அவர்களை ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடருக்கு கடும் போட்டியாளராக மாற்றியுள்ளது. அவர்களிடம் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களும் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் பேட்டிங் 90’களின் பிற்பகுதியிலும், 2000 ஆம் ஆண்டு தொடக்கத்திலும் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக இருந்தது. அந்த ஆதிக்கம் கடந்த 5-6 ஆண்டுகளாக மீண்டும் உருவாகியுள்ளது. அதற்கு காரணம் அவர்கள் அதிக அளவிலான டி20 தொடர்களில் விளையாடுகின்றனர். அவர்கள் பாகிஸ்தான் பிரிமீயர் லீக் போட்டிகளில் விளையாடுகிறார்கள். பிக் பேஸ் லீக் தொடர்களிலும் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுகின்றனர் என்றார்.
இதையும் படிக்க: ஆதித்யா எல்-1: விண்ணில் பாய்வதற்கான ஒத்திகை நிறைவு!
பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பையின் முதல் போட்டி இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.